நல்வரவு

வணக்கம் !

Sunday 15 November 2015

என் பார்வையில் புதுகை பதிவர் விழா – 2


 முந்தைய பதிவின் தொடர்ச்சி….
வலைப்பதிவர் கையேடு ஒரு சாதனை என்று சென்ற பதிவில் சொன்னேன் அல்லவா?  அது பற்றி இன்னொரு முக்கியமான செய்தியைச் சொல்ல மறந்துவிட்டேன்.  கடையில் நாம் வாங்கும் பொருட்களில் கணிணி  விலை பார்கோடு போல (BAR CODE) இக்கையேட்டில் QUICK RESPONSE CODE எனப்படும்  ஃகியூ ஆர் கோடு (QR CODE) தொழிட்நுட்பத்தைப்  பயன்படுத்தித் தயாரித்திருப்பது ஒரு சாதனை. 
QUCIK RESPONSE CODE
கைபேசியில் கியூ ஆர் கோடை தரவிறக்கி வைத்துக்கொண்டு, அதனை கையேட்டில் நாம் விரும்பும் வலைப்பூவுக்குப் பக்கத்தில் உள்ள கியூ ஆர் கட்டத்தின் மீது காட்டினால், அடுத்த நிமிடம் அத்தளத்துக்குச் சென்றுவிடும்.  நாம் வலைப்பூவின் பெயரைத் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியமில்லை!    

விழாவுக்கு நானும் என் தந்தையும் வருவதாக பதிவு செய்திருந்தோம்.  ஆனால்  முதல் நாள் மாலை அவருக்குத் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்படவே, என் தங்கையுடன் புதுக்கோட்டைக்குப் பயணமானேன்.

அதிகாலை 5.30 மணிக்குக் காரில் புறப்பட்ட நாங்கள், புதுகை வந்து சேர்ந்த போது மணி 10. வழியில் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ஆரோக்கியமாதா ஹாலை அடையும் போது மணி பத்தரை. 

வாசலில் நாங்கள் வந்து இறங்கவும், ஏதோ வேலையாக அண்ணன் முத்துநிலவன் அவர்கள் வாசலுக்கு வரவும் சரியாக இருந்தது.  அவரிடம் போய் அறிமுகப்படுத்துக்கொண்டபோது, வாங்க வாங்க என இன்முகம் காட்டி வரவேற்றார்.

வாசலில் நின்றிருந்த விழாக்குழுவினரும், இன்முகத்துடன் வரவேற்று கைப்பை, பேனா, குறிப்பேடு முதலியவற்றை அளித்தனர்.

நான் வந்த அமர்ந்த சிறிது நேரத்தில் பரிசளிப்பு விழா நடந்தது.  விமர்சனப்போட்டிக்கான பரிசை மேடைக்குச் சென்று வாங்கப் போன போது விழாக்குழுவின் பொருளாளர் கீதாவைச் சந்தித்துப் பேசினேன்.   ஓய்வு ஒழிவின்றி உழைத்ததால் களைத்திருந்தாலும், மலர்ந்த முகத்துடன் மேடைக்கும் வாசலுக்கும் ஏதோ வேலையாய் விழா முடியும் வரை நடந்தவண்ணமாகவேயிருந்தார்.

மேடையில் ஏறிய சமயம், வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலனைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.  வாங்க வாங்க என வரவேற்றார்.  அவரிடம் ஒரு நிமிடம் பேசிவிட்டுப் பரிசைப் பெற்றுக்கொண்டு, மறுபடி இருக்கைக்கு வந்து அமர்ந்தேன். 

அடுத்த நிமிடம் நீங்கள் தான் கலையரசியா என்று கேட்டபடி, பாவலர் சசிகலா வந்து தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார்.  விழாவில் சந்திக்க வேண்டும் என விரும்பியவர்களில், அவரும் ஒருவர்.  அவருடைய மரபுக் கவித்திறன் கண்டு பலசமயம் நான் வியந்திருக்கிறேன்.  அவரிடம் அளவளாவிய அம்மணித்துளிகள், வாழ்வின் மிகவும் மகிழ்வான தருணங்கள்!     

அடுத்து திரு தமிழ் இளங்கோ அவர்களிடம் நானே சென்று அறிமுகப்படுத்திக்கொண்டேன்.  அவர் வங்கிப்பணியிலிருந்தவர் என்று ஏற்கெனவே அறிந்திருந்தேன்.  ஆனால் அவர் எங்கள் ஸ்டேட் பாங்க் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அவரைச் சந்தித்த போது, அறிந்து கொண்டேன்.  விருப்ப ஓய்வு பெற்றவரிடம் தற்போதைய வங்கிப்பணிச்சூழல் குறித்துப் பேச, நிறைய செய்திகள் இருந்தன. 
      
மூத்த பதிவர் திரு சீனா அவர்களிடமும், திரு தமிழ்வாசி பிரகாஷ் அவர்களிடமும் சென்று அறிமுகம் செய்த போது, அவர்களுக்கு என்னைத் தெரியவில்லை.  இவ்வாண்டு ஜனவரி கடைசி வாரம், திரு வை.கோபு சார் சிபாரிசின் மூலமாக அறிமுகமாகி, வலைச்சர ஆசிரியர் பணி செய்தேன் என்பதை நினைவுப்படுத்தினேன்.  ஆனால் அவர்களுக்கு என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. 

கீதமஞ்சரி கீதா மதிவாணன் சிலரிடம் தம் புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுக்குமாறு சொல்லியிருந்தார்.  எனவே மேடையில் நடந்த பதிவர் அறிமுகத்தை உன்னிப்பாகக் கவனித்து, அவர்கள் யார் யார் என்றறிந்து கொண்டேன். 

அவர்களில் ஒருவர் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா,’ திரு ரமணி ஐயா அவர்கள்.  அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, கீதாவின் ‘என்றாவது ஒரு நாள்,’ புத்தகத்தை அளித்தேன்.  அன்புப் பரிசினைப் இன்முகத்துடன் பெற்றுக்கொண்ட அவர், கீதாவுக்கு தம் மகிழ்ச்சியையும் நன்றியினையும் தெரிவிக்கச் சொன்னார். 

இரண்டாவதாக திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள் ‘வித்தகர்கள்’ நூலை மேடையில் எஸ்ரா முன்னிலையில் வெளியிடத் தயாராகிய வேளையில்,  கீதாவின் புத்தகத்தைக் கொடுத்தேன்.  அவர் எனக்கொன்றும் கீதாவுக்கு ஒன்றுமாக ‘வித்தகர்கள்,’ நூலை அன்பளிப்பாக அளித்தார்.  

உடல்நலக்குறைவு காரணமாகவும், கடுமையான பணிச்சுமை காரணமாகவும், அதனை இன்னும் நான் வாசிக்கவில்லை.  விரைவில் வாசித்து, என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வேன்.

மதிய உணவு இடைவேளையின் போது உமையாள் காயத்ரியைச் சந்தித்துப் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.  எகிப்திலிருந்து தமிழகம் திரும்பிவிட்டதாய்த் தெரிவித்தார். 

விழாவில் கலந்து கொண்ட  பெண் பதிவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.  நான் சந்திக்க வேண்டும் என நினைத்திருந்த பெண் பதிவர்கள் பலர் வராததில், எனக்கு ஏமாற்றமே. 

விக்கிப்பீடியாவில் 250 கட்டுரைகள் எழுதி சாதனை படைத்திருக்கும் முனைவர் ஜம்புலிங்கம் அவர்களிடம் சென்று அறிமுகம் செய்துகொண்டேன்.  மூங்கில் காற்று முரளிதரன் அவர்களையும் மின்னல் வரிகள் பால கணேஷ் அவர்களையும் சந்திக்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி.  
  
அடுத்து கூட்டாஞ்சோறு செந்தில் என்னைச் சந்தித்துப் பேசினார்.  சுற்றுச்சூழல் வகைமையில், அவருடைய எல்லாக் கட்டுரைகளுமே மிகவும் சிறப்பாக இருந்தன; இருட்டு நல்லது என்ற கட்டுரை, முதற்பரிசு பெற்றதில் வியப்பேதுமில்லை என அவரைப் பாராட்டினேன்.  கீதா மதிவாணனின் புத்தகத்தை நான் அவருக்கு அன்பளிப்பாகத் தர, பதிலுக்கு அவர் புத்தகத்தை எனக்குப் பரிசளித்தார். 

மைதிலி கஸ்தூரிரெங்கன் படைப்புகள் சிலவற்றை வாசித்திருந்த நான் அவரைச் சந்திக்கவேண்டும் என விருப்பப்பட்டேன்.  கீதாவிடம் சென்று அவர் எங்கே எனக்கேட்டேன்.  அவர் மாடியில் இருப்பதாகவும் கீழே வரும் போது சொல்வதாகவும் சொன்னார்.  பின்னர் மைதிலியையும் அவர் மகள் நிறையையும் சந்தித்துப் பேசியது நிறைவாக இருந்தது.  அவருக்கு என்னைத் தெரியாது என நினைத்திருந்தேன்.  ஆனால் ஊமைக்கனவுகள் சகோவின் தளத்தில் நான் இட்ட பின்னூட்டங்கள் வாயிலாக அவர் என்னை அறிந்திருந்ததாகச் சொன்ன போது, எனக்கு மிகுந்த வியப்பு!

தொடர்வேன்……….


(படங்கள் அனைத்தும் வலைப்பதிவர் விழா பக்கத்திலிருந்தும், விழா பற்றிய பதிவர்களின் பதிவுகளிலிருந்தும் எடுக்கப்பட்டவை)